சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.014
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வானில் பொலிவு எய்தும் மழை பண் - நட்டபாடை (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=90vnAlHSZqM |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.014  
வானில் பொலிவு எய்தும் மழை
பண் - நட்டபாடை (திருத்தலம் திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) ; (திருத்தலம் அருள்தரு அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி உடனுறை அருள்மிகு கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் திருவடிகள் போற்றி )
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி, கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த, தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே. | [1] |
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல், குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம் அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி, எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே. | [2] |
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி, குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல் வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே. | [3] |
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல், குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம் பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே. | [4] |
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும் கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம் நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே. | [5] |
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர, கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம் அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும் பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே. | [6] |
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம் அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே. | [7] |
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து, குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம் ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே. | [8] |
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம் மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள் இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே. | [9] |
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக் குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம் புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற, பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே. | [10] |
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக் கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி, ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார், ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே. | [11] |